Home

Advertisement

இன்டிரிபிட் ஐபக்ஸ் வெளியீடு - உதகை உதகை - நவம்பர் 28. கம்ப்யூட்டர் வோர்ல்டு, உதகை சார்பில் உபுண்டு இன்டிரிபிட் ஐபக்ஸ் உதகையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், மாணவர்கள், கணினி விற்பனையாளர்கள், கனேடியர் என பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

கலந்து கொண்டோருக்கு உபுண்டு நிறுவும் முறை, உபுண்டுவில் பொதிகள் பராமரிப்பு, வைன் பயன்படுத்தி விண்டோஸ் மென்பொருள் நிறுவும் முறை, இணைய வசதிகள் போன்ற விடயங்கள் செய்முறையாக விளக்கப்பட்டன.

நிகழ்ச்சியினை உபுண்டு தமிழ் குழுமத்தின் சார்பில் இராமதாசும் பத்மநாதனும் நடத்திக் கொடுத்தனர். அனைவருக்கும் உபுண்டு வட்டுக்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்து நடத்திக் கொடுத்த கம்ப்யூட்டர் வோர்ல்டு டெர்ரன்ஸ் எஸ் இராஜேஷ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

உபுண்டு இன்டிரிபிட் ஐபக்ஸ் திருப்பூர் ஐடி அசோசொயேஷன் சார்பில் நேற்றைய தினம் வெளியடப்பட்டது. நேற்றைய தினம் (22-11-08) அதன் உறுப்பினர்களுக்கு உபுண்டு இயங்குதளத்தின் அடிப்படைகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டன.

உபுண்டுவில் எவ்வாறு ஒரு பயனர் தமிழ் வசதிகள் துவங்கி பல்லூடக வசதிகள், பொதிகள் நிறுவுவது, விண்டோஸ் இயங்கு தளத்தில் பிரபலமாகப் பயன்படுத்தப்படும் பயன்பாடுகளுக்கு மாற்றாக கிடைக்கும் மென்பொருள்கள் போன்றவை விரிவாக விளக்கப்பட்டன. டேலி போட்டோஷாப் போன்ற பயன்பாடுகளை உபுண்டுவில் வைன் மூரம் இயங்குவதை பார்த்து கலந்து கொண்டோர் ஆச்சரியம் கொண்டனர்.

கணினிகளை உபுண்டு கொண்டு அசோசியேஷன் உறுப்பினர்கள் விற்பனை செய்தால் அங்ஙனம் வாங்குவோருக்கு அசோசியேஷன் சார்பில் மாதத்தில் ஒரு நாள் தொழில் சார்ந்த பயிற்சி கொடுக்கலாம் என்ற யோசனை உபுண்டு தமிழ் குழுமம் சார்பில் முன்வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தித் தந்த திருப்பூர் ஐடி அசோசியேஷனுக்கு மனமார்ந்த நன்றிகள். அசோசியேஷனின் தலைவர் இரவிச்சந்திரன், பாபு, செந்தில், தியாகு உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். நிகழ்ச்சியினை இராமதாசும், சிவாவும் (கம்பன் பொறியியல் கல்லூரி மாணவர்) இணைந்து நடத்தினர். கட்டற்ற மடல் வழங்கி சேவைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கும் நமது பணிகள் விரிய வேண்டும் போன்ற பாடங்களும் இந்நிகழ்வில் கிடைக்கப்பெற்றது.
கேரள மாநிலம் கொச்சின் - அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக தேசிய அளவிலான கட்டற்ற மென்பொருள் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் முதல் நாள் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். சித்தார்த், பவன், அருண், பரணி,  ராஜசேகர், பாலாஜி என கிட்டத்தட்ட பதினைந்து பேர் தமிழகத்திலிருந்து கலந்து கொண்டோம். நிகழ்ச்சிக்கு ஜஸ்டிஸ் கிருஷ்ண ஐயர் தொலைவிலிருந்து திரையில் தோன்றி வாழ்த்துரை வழங்கினார். கேரள கல்வியமைச்சர் திரு பேபி மாநாட்டை துவக்கி வைக்க, பல்கலைக்கழக துணைவேந்தர் கங்கன் பிரதாப் தலைமை வகித்தார்.

லோகலைசேஷன் - இன்டர்நேஷலைசேஷன் எனும் தலைப்பில் தில்லி கோரா மொகந்தி, சுகந்திர மலையாளக் கணிமை ஷ்யாம் ஆகியோருடன் இணைந்து ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்டு கட்டற்ற கணிமைச் சூழலில் இந்திய மொழிகளுக்காக இதுவரை  நடைபெற்ற பணிகள் மற்றும் இனி நடைபெறவேண்டியிருக்கும் பணிகள் போன்ற விடயங்களை அலசினோம். இன்டுலினக்ஸ் திட்டத்தின் முறையான அடுத்த சந்திப்பு வரும் 2009 ஜனவரி மாதத்தில் சடைபெறலாம். விவரங்கள் கிடைக்கப்பெற்றதும் பகிர்ந்து கொள்கிறோம்.

தொழில் முனைவோருக்கான ஒரு கூடுதலிலும் கலந்து கொண்டு கேரளத்தில் கட்டற்ற மென்பொருளை மட்டும் சார்ந்து வெற்றிகரமாக தொழில் நடத்தி வரும் அனூப் ஜான் உள்ளிட்டோரது அனுபவங்களையும் கேட்க முடிந்தது. மாலை உலக பொருளாதார சிக்கலும் ஐடி தொழிலும் எனும் தலைப்பில் ஒரு கருத்தரங்கமும் நடைபெற்றது. நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் திரு. சீத்தாராம் யெச்சூரி, கேப்ஜெமினி நிறுவன வழிகாட்டி பொறுப்பில் இருக்கும் ஆஞ்சன் பேனர்ஜி ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

கேளரத்துக்கே உரிய மோகினியாட்டம், கதக்களி, பரதம் போன்ற கலை நிகழச்சிகளுக்கும் கண்களுக்கு விருந்தாய் அமைந்திருந்தன. மடலாடற் குழுவிலேயே பெரும்பாலும் அறிந்து வந்துள்ள பலரையும் நேரடியாக சந்திக்கும் ஒரு வாய்ப்பினை இந்நிகழச்சி அமைத்துத் தந்தது.

நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்த உழைத்த அத்துனை பேருக்கும் பாராட்டுக்கள். நல்லதொரு உபசரிப்பும் சுவையான கேரள உணவும்
விருந்தோம்பலும் பசுமையான சூழலும் நினைவில் நீடித்து நிற்கப் போகிறதென்றால் அது மிகையாகாது.